`பெண்கள யூடியூப்'ல இப்டி பேசுவியா?’ நடுரோட்டில் யூடியூபரை அறைந்த 'பிக்பாஸ்' நடிகை.. வைரலாகும் வீடியோ !
கடந்த வியாழக்கிழமை ஹைதராபாத் அருகிலுள்ள யூசுப்குடா பகுதிக்கு பிராங் வீடியோக்கள் மூலம் பிரபலம் ஆன யூடியூப்பர் ஸ்ரீகாந்த் ரெட்டி வந்திருந்தார். இவர் அப்பகுதியில் சமூக வலைதளபக்கங்களில் மிக பேமஸ்.
அவரைக் கண்டதும், அங்கு வந்த பிரபல தெலுங்கு குணசித்திர நடிகை கராத்தே கல்யாணி, ’பெண்களை ஏன் யூடியூப் சேனலில் தவறாக பேசுகிறாய்?’ என்று கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சங்கர்தாதா எம்.பி.பி.எஸ், லீலா மஹால் சென்டர், சத்ரபதி, நேனு லோக்கல், குண்டூர் டாக்கீஸ் உட்பட பல படங்களில் நடித்ததன் மூலம் கராத்தே கல்யாணி தெலுங்கு திரையுலகில் பேமஸ். இதன் மூலம், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.
கடந்த வருடம் பாஜகவில் இணைந்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது, யூடியூப்பர் ஸ்ரீகாந்த் ரெட்டியுடன் கொண்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த கல்யாணி, திடீரென அவர் கன்னத்தில் அறைந்தார்.
இதை எதிர்பார்க்காத யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டியும் கல்யாணியை அறைந்தார். இந்த சண்டையில் ரெட்டியின் சட்டை கிழிந்தது. நடுரோட்டில் இருவரும் அடித்துக் கொண்டதைப் பார்த்த அப்பகுதியினர், அதிர்ச்சி அடைந்தனர். இதை கல்யாணியும் அந்த யூடியூபரும் தங்கள் செல்போன்களில் வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டி, எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் கல்யாணி மீது புகார் அளித்தார். அதேபோல கராத்தே கல்யாணியும் தன்னைத் தாக்கியதாக ஸ்ரீகாந்த் ரெட்டி மீது போலீஸில் புகார் அளித்தார். இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நடுரோட்டில் நடிகையும் யூடியூபரும் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.