'இத செஞ்சா தக்க நடவடிக்கை..' சூர்யா 42 படக்குழு விடுத்த பகீர் எச்சரிக்கை !

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை தனக்கென்று வகித்து வருபவர் நடிகர் சூர்யா. விக்ரம் மற்றும் ராக்கெட்ரி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைய உள்ள படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. 3டியில் உருவாக உள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதன் படி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பெதானி நடிக்க உள்ளதாகவும், சுமார் 10 மொழிகளில் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா போர் வீரனாக நடிக்கு இந்த படம் பீரியட்-ஃபேண்டஸி படமாக எடுக்கப்பட உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி சூர்யா ரசிகர்களால் இந்திய அளவில் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது சமீப காலமாக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்படி சிலரால் பகிரப்பட்டு வருகிறது என்றே தடயம் தெரியவில்லை. படம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிக அளவில் சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. இதனால் படக்குழுவினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இப்படி பட்ட சம்பவங்களுக்கு தீர்வு காணும் விதமாகவே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்’ என்று தலைப்பிடப்பட்ட செய்தியில், “எங்கள் தயாரிப்பான #Suriya42 இன் படப்பிடிப்புத் தளங்களில் இருந்து சிலர் ‘வீடியோக்கள் மற்றும் படங்களை’ பகிர்வதை நாங்கள் கவனித்தோம். ஒவ்வொரு வேலையும் முழு குழுவின் இரத்தத்தையும் வியர்வையும் உள்ளடக்கியது.
இந்தப் படத்தை அனைவருக்கும் பிரமாண்டமான திரையரங்க அனுபவமாகப் பரிசளிக்க விரும்புகிறோம்” மேலும் இப்படி வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை நீங்கள் நீக்கினால்/அகற்றினால் அது பெரும் உதவியாக இருக்கும், மேலும் எதிர்காலத்தில் அதைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து அவ்வாறு பகிர்பவர்கள் மீது ‘பதிப்புரிமை மீறல்’ கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.