திரையரங்குகளில் இனி 'இது' இலவசம்.. குழந்தைகளுக்கான உணவு எடுத்து வர அனுமதி - உச்ச நீதிமன்றம் உத்தரவு
திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் உணவுப் பொருட்கள் எடுத்துவர தடை விதிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், திரையரங்குளில் பார்வையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வசதி செய்துத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், உணவுப் பொருட்களை எடுத்துவரக் கூடாது என்று நிபந்தனை விதிக்க தியேட்டர் நிர்வாகத்துக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தியேட்டர்கள் கேளிக்கையை முன்னிருத்தி நடைபெறும் தனியார் அமைப்பு என்றும் அங்கு வரும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
தியேட்டர்களுக்குள் விற்கப்படும் சிற்றுண்டி வகைகள், குளிர்பானங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யவும் தியேட்டர்களுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், குழந்தைகளுடன் வருபவர்கள் குழந்தைகளுக்கான உணவை எடுத்துவர தடை விதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.