'படம் ரிலீசாகி 3 நாள் கழிச்சு தான் Review போடணும்..' யூடியூபர்ஸ்'ஐ கதிகலங்க வைத்த தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் தீர்மானம் !
திரைப்படங்களின் விமர்சனங்களை அப்படங்கள் ரிலீசாகி 3 நாட்களுக்கு பின்னர் வெளியிட வேண்டும் என்கிற தீர்மானம், தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பொதுவாக தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடத்தப்பட்டது. சங்கத்தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கியமான ஒன்று, திரைப்படங்களின் விமர்சனங்களை அப்படங்கள் ரிலீசாகி 3 நாட்களுக்கு பின்னர் தான் வெளியிட வேண்டும் என தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தால் சலசலப்பும் ஏற்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் யூடியூப் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒரு படம் ரிலீசானால் அதன் அதிகாலை ஷோ அல்லது முதல் ஷோ முடிந்ததுமே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாகி விடுகின்றன. அதைவைத்தே படம் ஓடுமா ஓடாதா என்பதை கணித்துவிடும் அளவுக்கு விமர்சனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த விமர்சனங்களால் படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக தயரிப்பாளர்கள் தரப்பில் புகார்களும் எழுந்து வந்தன.
அதனைக் கருத்தில் கொண்டு, தற்போது 3 நாட்களுக்கு பின்னர் தான் ஒரு படத்தின் விமர்சனங்களை வெளியிட வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த தீர்மானத்தால் யூடியூபர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுதவிர படம் பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் கருத்து கேட்டு வருபவர்களை தியேட்டருக்கு உள்ளேயே அனுமதிக்கூடாது என்ற தீர்மானமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.