ஷூட்டிங் அப்போ கன்னத்தில் ஓங்கி அறைந்தார் மாரி செல்வராஜ்… பரியேறும் பெருமாள் நடிகர் பேட்டி !
பிரபலம் இயக்குனர் ராம் அவர்களின் துணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், தனதுஇயக்கத்தில் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி, யோகி பாபு, தெருக்கூத்து கலைஞர் தங்கராசு என பலர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை நல்ல வரவேற்பு பெற்றது. பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன் இப்படத்தை தயாரித்திருந்தது.
ஜாதி பாகுபாடு, அந்த ஜாதிவெறியின் கொடூரம் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நீண்டிருப்பது, ஒடுக்கப்பட்டவர்களின் மீது மிக நுணுக்கமாக நடத்தப்படும் வன்முறை, அந்த வன்முறையால் ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் அழியாத வலி என அத்தனையும் எடுத்துரைக்கும் திரைப்படமாக அமைந்தது பரியேறும் பெருமாள். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாகவே இருந்தது.
இப்படத்தில் கதாநாயகன் கதிரின் தந்தையாக வந்த தங்கராஜை யாரும் எளிதில் மறக்க முடியாது. இவரது கதாபத்திரம் படத்திற்கு மிகவும் பிளஸ்சாக அமைந்தது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள தங்கராஜ், பரியேறும் பெருமாள் படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில் இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்று சொன்னார் மாரிசெல்வராஜ்.
நான் எங்கோ தெருவுல நிம்மதியாக ஆடிக்கிட்டு இருந்தேன் இங்கே கூட்டிவந்து இப்படி பண்றீங்களே என கேட்டேன். உடனே என் கன்னத்தில் ஓங்கி அறைந்து, நீ செத்து போன பிறகும் இந்த படத்தை பார்க்கும் அனைவரும் உன்னையும், உன் கலையையும் பார்த்து கொண்டாடுவார்கள், காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன் நீ என்று சொன்னார். அவர் சொன்து போல படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதும் பலர் என்னை பாராட்டி வருகிறார்கள். இந்த பெருமை மாரி செல்வராஜால் எனக்கு கிடைத்தது என்று தங்கராஜ் உருக்கமுடன் கூறியுள்ளார்.