இரவின் நிழல் வெற்றியைத் தொடர்ந்து.. அடுத்த படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் பார்த்திபன் !

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வந்தனர். படத்தின் முதல் 30 நிமிடங்கள் படத்தின் மேக்கிங் வீடியோ, அதற்கு பிறகு இன்டர்வெல் தொடர்ந்து, 96 நிமிடங்கள் Non linear Single shot ல் எடுக்கப்பட்ட திரைப்படம்.
50 வயதாகும் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அதன் இருண்ட பக்கங்களை திரும்பிப் பார்ப்பது தான் படத்தின் கதை. இதை த்ரில்லிங், சுவாரஸ்யம் கலந்து ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக சொல்லி இருக்கின்றார்களாம்.
இப்படம் உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. பார்த்திபன் இயக்கிய படங்களில் அதிகாலை காட்சி போடப்பட்ட முதல் படம் இரவின் நிழல் தான். ரசிகர்களிடம் இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டர் வாயிலாக தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர்.
இப்படத்திற்காக பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். முதல் நாளில் பெரும்பாலான இடங்களில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதால் பாக்ஸ் ஆபிஸிலும் நன்கு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பார்த்திபன், 1989ம் ஆண்டு வெளியான புதிய பாதை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை அடுத்தடுத்து இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.
கடந்த 2019ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. அதில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். விரைவில் ஹாலிவுட்டிலும் இப்படத்தை எடுக்க உள்ளார் பார்த்திபன்.
ஒத்த செருப்பு படத்தை மிஞ்சும் வகையில் இவர் தற்போது எடுத்த படம் இரவின் நிழல் படம் அமைந்துள்ளது. இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. தனது புது முயற்சிக்கு அடுத்தடுத்து வரவேற்பு கிடைத்ததால், தனது அடுத்த படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க உள்ளாராம் பார்த்திபன்.
அதன்படி பார்த்திபன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் மனிதர்கள் யாரும் நடிக்கப்போவதில்லையாம். முழுக்க முழுக்க விலங்குகளை மட்டுமே வைத்து ஒரு படத்தை எடுக்க அவர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் இந்த பாணியில் படங்கள் வந்திருந்தாலும், தமிழில் இதுவரை அத்தகைய படங்கள் எடுக்கப்படவில்லை. அவரின் இந்த முயற்சிக்கும் வெற்றி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.