'எல்லாமே சரியா இருக்கனும்னு நெனச்சேன்.. நேத்துல இருந்து..' கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட பார்த்திபன் !
தமிழ் சினிமா உலகில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் பார்த்திபன். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
பிரபல இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் ரெகார்ட் பிரேக் செய்யும் அளவிற்கு சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி கடந்த மே 1ம் தேதி நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் மேடையில் உரையாடிக்கொண்டிருந்த இயக்குனர் பார்த்திபன், மைக் சரியாக வேலை செய்யவில்லை என மேடையில் இருந்து மைக்கை கீழே போட்டது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
பிறகு விழாவில் பேசிய பார்த்திபன், ‘பொதுவாகவே நான் மேடையில் பேசும்போது ரொம்ப பதட்டம் ஆகிவிடுவேன். ஏனென்றால், எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பேன். மைக் வேலை செய்யவில்லை. அந்த கோபத்தில் நான் மைக்கை தூக்கி போட்டு விட்டேன். நான் செய்தது அநாகரிகமான செயல் தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.
மேலும், பார்த்திபன், ரோபோ ஷங்கர் மீது மைக்கை தூக்கி எறிந்தார் என சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக இந்த சம்பவம் மாறி போகவே, பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், ரோபோ ஷங்கரிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.