கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான பதிவு.. வறுத்தெடுத்த ரசிகர்களால் பதிவை நீக்கிய இயக்குனர் !
பிரபல இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மோகன் ஜி, பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் உலகில் அடி எடுத்து வைத்தவர். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு, திரௌபதி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து, இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் திரௌபதி, ருத்ரதாண்டவம். இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் பேசுபொருளாக மாறி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது மோகன் ஜி இயக்கி வரும் படம் பகாசூரன். இப்படத்தில் கதாநாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார்.
ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மேலும், செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இயக்குனர் மோகன் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.
கடந்த 1 வாரமாக தமிழகத்தையே உலுக்கி வரும் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் சம்பவம், நேற்று உச்சம் பெற்று கலவரம் வரை சென்றது தான் சமூக வலைத்தளங்கள் தொடங்கி மக்கள் வரை பேசுபொருளாக உள்ளது.
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் 3வது மாடியில் இருந்து ஸ்ரீமதி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.
ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் மோகன் அவர்கள் தனது டுவிட்டரில், ‘கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் முதல் முறையாக நடந்த சம்பவம் அல்ல. இன்னும் பல சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளது. மூன்று மாதம் காத்திருங்கள்’ என்று பதிவிட்டு தனது படத்தினுடைய பகாசூரன் டைட்டிலை பதிவிட்டிருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த மாதிரி நேரத்தில் கூட உங்களுடைய படத்தின் புரமோஷன் பண்றீங்களா? உங்களுக்கே நியாயமா? என்று திட்டி தீர்த்து வருகிறார்கள். உடனே இயக்குனர் மோகன் பதிவை நீக்கி இருக்கிறார்.