பள்ளி சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற கும்கி பட நடிகர்..போக்சோவில் கைது !
மறைந்த பிரபல நடிகர் ரவி அவர்களின் மகன் ஸ்ரீஜித் ரவி. இவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மலையாள திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ஸ்ரீஜித், தமிழ் மொழியில் கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 60க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர், வேட்டை, மத யானை கூட்டம், கதகளி, அசுரவதம் போன்ற திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பள்ளி சிறுமிகள் முன் தவறாக நடந்துகொண்டதாக ஒரு குற்ற வழக்கு உள்ள நிலையில், தற்போது மீண்டும் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் பாலியல் ரீதியான புகார்கள் மலையாள திரையுலகையே கலங்கடித்து வருகிறது. திலீப், விஜய் பாபுவை தொடர்ந்து, தற்போது ஸ்ரீஜித் ரவி. 46 வயதான இவர், கடந்த 4ம் தேதி கேரளா, திருச்சூரில் உள்ள பூங்காவின் அருகே தனது சொகுசு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் இருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் அருகில் காரை நிறுத்திய ஸ்ரீஜித் நிர்வாணமாக அவர்கள் முன் தோன்றி, ஆபாசமான வார்த்தைகளை பேசியதுடன், சிறுமிகளை தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடிகர் ஸ்ரீஜித் ரவியை கைது செய்துள்ளனர். ஏற்கனவே ஸ்ரீஜித் கடந்த 2016ம் ஆண்டு இது போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடிகையை காரில் கடத்தி சென்று சித்ரவதைக்கு ஆளாக்கிய வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் நடிகையை பாலியல் வன்புணர்வு செய்ததாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு நடிகர் போக்சோவில் கைதாகியுள்ளது கேரளா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.