அரசியலில் அடியெடுத்து வைக்கிறாரா கார்த்தி ? இணையத்தில் தீயாய் பரவும் பதிவு !
அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இப்படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மஹான் அல்ல, சிறுத்தை,கோ, சகுனி, தோழா, மெட்ராஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களை தந்ததன் மூலம் தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
கைதி, தம்பி, சுல்தான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் 1 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது புகைப்படம் போட்டு அரசியல் போஸ்டர் ஒன்று வைரல் ஆகி வருகிறது.
நடிகர் விஜய், சூர்யா, அஜித் ஆகியோருக்கு அவர்களது ரசிகர்கள் மதுரையில் அரசியல் போஸ்டர்கள் ஒட்டி வந்த இவர்கள், இந்த வரிசையில் தற்போது கார்த்தியும் இணைந்துள்ளார். இவர் வரும் 25ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
தனது நடிப்பு வருமானத்தின் மூலம் குழந்தைகள் படிப்பு, விவசாயம் போன்ற பல பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் இவருக்கு, மதுரையைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில், ‘நல்ல எண்ணங்களை மக்களிடம் சேர்ப்போம் தம்பி கார்த்தி’ என்ற வாசகத்துடன், நடிகர் கார்த்தி தலைமை செயலகம் முன்பு நிற்பது போலவும், வலது பக்கம் எம்.ஜி.ஆரும், இடது பக்கம் கருணாநிதி என முன்னாள் முதலமைச்சர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், நடிகர் கார்த்தியையும் அரசியலுக்கு ரசிகர்கள் இழுத்துள்ளது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து அகில இந்திய கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் சுவரொட்டி ஒட்டிய, ‘மதுரை வடக்கு மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்ற’ நிர்வாகிகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தங்களது தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக சுவரொட்டியை ஒட்டியதாகவும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.