மயக்க ஊசிக்கு பதில் முகப்பருவுக்கான ஆசிட்டை செலுத்திய மருத்துவர்.. முகம் வீங்கி அடையாளம் மாறிய பிரபல நடிகை
கன்னட நடிகையான ஸ்வாதி சதிஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். சமீபத்தில், இவர் மேற்கொண்ட ரூட் கேனல் அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவரது முகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. முகத்தின் வலது பக்கம் முழுவதுமாக வீங்கி, அடையாளம் காண முடியாத அளவு மாறிவிட்டது.
இது பல் சிகிச்சைக்கு பிறகு ஏற்படும், ஒரு பொதுவான பக்க விளைவு என்றும், சில மணிநேரங்களில் வீக்கம் குறையும் என்றும் சுவாதியிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், 20 நாட்களுக்குப் பிறகும், அவரது முகம் வீங்கியிருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் ஸ்வாதியை பரிசோதித்த மருத்துவர்கள் பல் வேரை அகற்றினால் சரியாகிவிடும் எனக்கூறி அதற்காக சிகிச்சை அளித்துள்ளனர். இருந்தும் வீக்கம் குறையாத காரணத்தால் விளக்கம் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தார் . மேலும் அந்த கிளினிக்கிற்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
சுவாதி சதீஷின் தற்போதைய நிலை அவரது நடிப்பு தொழிலுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் நடித்துள்ள படம் ஒன்று ரிலீஸுக்கு காத்திருக்கிறது. தனது உடல்நிலை காரணமாக பொது வெளியில் சென்று தனது படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் கூட ஈடுபட முடியவில்லை என வருத்தம் தெரிவித்து வருகிறார்.
சுவாதி இப்போது நிலையில் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகம் வீங்கியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில் சுவாதிக்கு மயக்க ஊசிக்கு பதிலாக முகத்தில் உள்ள முகப் பருவை குணப்படுத்த பயன்படுத்தக் கூடிய சாலிசிலிக் ஆசிட்டை (Salicylic Acid) மருத்துவர் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இது தோலில் ஊடுருவி சென்று முகப் பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும். இந்த தகவலை அடுத்து அந்த மருத்துவர் மீது ஸ்வாதி புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.