லோகேஷுக்கு கமல் எழுதிய ‘Life time settlement letter'.. லோகேஷின் எமோஷனல் ட்வீட் !
கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இயக்குனர். அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.
இப்படத்தில், கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய பாகத்தில் சூர்யா நடித்துள்ளார்.
கமலின் வளர்ப்பு மகனான காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ். காளிதாஸ், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கண்டுபிடிக்கிறார். இதையடுத்த முகமுடி கும்பல் ஒன்று காளிதாஸை கொலை செய்ய, இதனைத் தொடர்ந்து சில போலீஸ்காரர்களை அந்த முகமுடி கும்பல் கொலை செய்கிறது. கமலும் அந்த கும்பலால் கொலை செய்யப்படுவது போல் காட்டுகின்றனர்.
அந்த முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக நியமிக்கப்படுவது பகத் பாசில். இந்த தொடர் கொலைகள் பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் பகத் பாசிலுக்கு கிடைக்கிறது. வரிசையாக போலீசை மட்டும் குறி வைத்து கொல்லும் அந்த முகமுடி கும்பல், போலீஸ் அல்லாத கமலை ஏன் கொலை செய்தனர் என விசாரிக்கும் போது தான் செம்ம ட்விஸ்ட் வெளியாகிறது.
இறுதியில் அந்த முகமுடி கும்பல் யார் என்பதை பகத் பாசில் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் தான் இந்த விக்ரம்.
படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.
சீக்ரெட் ஏனெண்டாக பகத் பாசில் கவனத்தை ஈர்க்கிறார். முதல் பாதி முழுக்க பகத் பாசில் தான் ஹீரோ. போதைப் பொருள் வியாபாரியான விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி என 3 மனைவிகளுடன் மனைவிகளுடன் மஜாவாக வாழும் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கார்ட்டூனில் பாப்பாய் கீரையை சாப்பிடுவது, சோட்டா பீமில் பீம் லட்டு சாப்பிடும் போது உடம்பில் சக்தியேற்றுவது போல் கஞ்சா எடுத்துக்கொண்ட உடன் அசுர பலம் பெறும் காட்சிகள் அல்டிமேட்.
பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.
கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா . படத்தின் இறுதியில் கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய படங்களுக்கு லீடு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் லோகேஷ்.
விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
இந்நிலையில், கமல்ஹாசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், ‘லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர். இந்த கடிதத்தை படிக்கும்போது எவ்வளவு எமோஷனல் ஆனேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது நன்றி ஆண்டவரே’ என பதிவிட்டுள்ளார்.
கமல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : “அன்பு லோகேஷ், பெயருக்கு முன் “திரு” போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான, பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும், பொது வெளியில்.
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உள்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம், யூடியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு. லோகேஷ் கனகராஜ், தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக் கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள்.
அயராது.. விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான்”
என அந்த கடிதத்தில் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
“Life time settlement letter”
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/5yF4UnGnVj