விக்னேஷ் சிவன் பிரஸ்மீட்டில் தள்ளுமுள்ளு.. 'அடித்து, கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதாக' அஜித் மேலாளர் உட்பட 3 பேர் மீது புகார்!
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார். இந்நிலையில், வரும் ஜூன் 9ம் தேதி சென்னை அடுத்து மஹாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், தனக்கும் நயன்தாராவிற்கும் நடக்கவிருக்கும் திருமணம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
07-06-2022 செவ்வாய்க்கிழமை காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர ஹோட்டலில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க தனியார் தொலைக்காட்சி நிருபர் திரு.ரா.ஆனந்தன் சென்றிருந்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சில செய்தியாளர்கள் பேச முயற்சி செய்துள்ளனர். அப்போது செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, ஆனந்தனிடம் , நீ யார் என்று ஒருமையில் கேட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிறுவனம் குறித்தும் அவர் தகாத வார்த்தை கூறியதாக அங்கு வாக்குவாதம் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மன உளைச்சல் அடைந்த செய்தியாளர் ஆனந்தன், மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவிடம், எப்படி எங்கள் நிறுவனம் குறித்து தவறாக பேசலாம்? என கேள்வி எழுப்பியுள்ளார். சுரேஷ் சந்திராவின் உதவியாளர்கள் / நண்பர்கள் குறிப்பாக நாசர் மற்றும் தியாகு ஆகியோர் செய்தியாளர் ஆனந்தன் மீது கை வைத்து தள்ளி மிரட்டியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஆனந்தன் இது தொடர்பாக சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை சுரேஷ் சந்திரா அவரது நண்பர்கள் இருவர் தகாத வார்த்தைகளால் தனது நிறுவனம் பற்றி பேசி திட்டி தன்னை தள்ளிவிட்டதாக புகாரில் தெரிவித்ததன் பேரில் போலீஸார் சி.எஸ்.ஆர் வழங்கியுள்ளனர்.
இது குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், “இது அத்துமீறல் - அநாகரீக மிரட்டல் எனக் கண்டித்துள்ளது. சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுவாக பல இடங்களில் நிகழ்வுகளில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள், மிரட்டல்கள், அவமதிப்புகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்கு அல்ல.
பத்திரிகையாளர்கள் / ஊடகவியலாளர்கள் மதிப்புடன் நடத்தப்படுவதும் அவர்களை சுதந்திரமாக கடமையாற்ற விடுவதுமே நல்ல சமுகத்தின் நல்லடையாளம்” என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.