மனைவி சாக்ஷியின் கதையை தமிழ் திரைப்படமாக உருவாக்கும் தோனி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமானவர் எம்.எஸ்.தோனி. இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட்டதில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இவரது கிரிக்கெட் ஸ்டைலுக்கும், நற்குணத்திற்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தோனி தனி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.
அதிலும், அவர் தயாரிக்க போகும் முதல் படமே தமிழ் படம் தான். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளார். அவர் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பில் எம்.எஸ்.தோனி ஈடுபட இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதில் முதல்கட்டமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படத்தை அவர் தயாரிக்கிறார் என்றும், அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது எனக் கூறப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ‘ வுமன்’ஸ் டே அவுட் ‘ என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.
தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.