'அரசியல் கட்சிகள் மூலம் வரும் மிரட்டல்களுக்கு சங்கம் சார்பில் சட்ட நடவடிக்கை' - நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அதிரடி
3 வருடத்திற்கு பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 20ம் எண்ணப்பட்டது. இதில், பாண்டவர் அணி வெற்றிபெற்றது. அதிலும், முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் ஏறக்குறைய இந்த அணியில் இருந்தே வெற்றி பெற்றனர்.
தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் 24 பேர் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதனிடையே, நேற்று நடிகர் சங்க நிர்வாகிகள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிலையில், நாசர் தலைமையில் நடிகர் சங்கச் செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பேசிய பொதுச் செயலாளர் விஷால், “நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய பிறகு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பேசுகையில், “தணிக்கை குழு சான்று பெற்ற திரைப்படங்களுக்கு, அரசியல் கட்சிகள் மூலம் வரும் மிரட்டல்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நடிகர்களுக்கும் உதவுவோம்” என அதிரடியாக கூறினார்.