புற்றுநோய் பாதிப்பால் போராடி வந்த இளம் நடிகர் சிகிச்சை பலனின்றி மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
அசாம் மாநிலத்தில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் கிஷோர் தாஸ். சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இதையடுத்து 300க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களிலும் பணியாற்றி உள்ளார். இதுதவிர தாதா துமி ட்ஸ்டோ போர் என்ற படத்தில் கிஷோர் தாஸ் கடைசியாக நடித்திருந்தார்.
இவர் கடந்த ஓராண்டாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். அங்கு அவருக்கு கீமோதெரபி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் கிஷோர் தாஸ், 30 வயதில் மரணமடைந்திருப்பது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவால் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகர் கிஷோர் தாஸ் நடித்த கடைசி படம் கடந்த மாதம் 24ம் தேதி ரிலீசானது. படம் வெளியாகிய ஒரே வாரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் கிஷோர் தாஸின் இறுதிச் சடங்கு சென்னையிலேயே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.