நெஞ்சுக்கு நீதி Review: அம்பேத்கர் வரிகள்.. மனதை வருடும் வசனங்கள்.. எதார்த்தத்தை கண்முன் கொண்டு வந்த அருண்ராஜா!
2019ம் ஆண்டு இந்தியில் ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள்15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்னும் புத்தகத்தின் பெயரையே இப்படத்திற்கு வைத்துள்ளனர்.
போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
2021ம் ஆண்டு டிசம்பர் மாதமே இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்த நிலையில், 2022ம் ஆண்டு மே 20ம் தேதி தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ரீமேக் படம் என்றாலும், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி எதிர்பார்ப்புடன் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
நேர்மையாக பணியாற்றும் ASP விஜயராகவன்(உதயநிதி ஸ்டாலின்) பணிமாற்றம் செய்யப்பட்டு பொள்ளாச்சிக்கு வருகிறார். அவர் பணியேற்ற சில நாட்களில், ஒரு சமுதாயத்தை சேர்ந்த 3 சிறுமிகள் காணாமல் போகிறார்கள்.
அதில் 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட படுகிறார்கள். தற்கொலையா கொலையா என தொடங்கி அடுத்தடுத்து நகர்கிறது கதை.
இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த 2 சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டுள்ள தகவல் தெரியவர, அடுத்தடுத்து பல அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் தெரியவருகிறது.
ஆனால், அவரை சுற்றி இருக்கும் சில போலீசாரும், சில அரசியல் சார்ந்தோரும் இந்த வழக்கை நேர்வழியில் நடத்தவிடாமல், முடிவுக்கு கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார்கள்.
இவர்கள் சூழ்ச்சியில் இருந்த தப்பித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கி கொடுத்தாரா உதயநிதி? அந்த இன்னோரு சிறுமிக்கு என்னவானது? இறுதியில் நடந்தது என்ன என்பதே படத்தின் மீதி கதை.
சட்டத்தை கடைபிடிக்கும் நேர்மை, காவல் அதிகாரியாக கம்பீரம், அனைவரும் சமம் என பேசும் வசனங்கள் என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் உதயநிதி .
அம்பேத்கர் பற்றி உதயநிதி பேசும் அனைத்து வசனத்திற்கும் தனி க்ளாப்ஸ். தான்யா சிறிது நேரம் வந்து போனாலும், நேர்த்தியாக கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்பெக்டராக சுரேஷ் சக்ரவர்த்தி, அதிகாரவர்கத்தை எதிர்த்து போராடும் ஆரி, மேலும், நடிகர் இளவரசு, மயில்சாமியின் நடிப்பு காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.
ஆணவக் கொலை, பூமியில் பிறக்கும் அனைத்து உயிர்களும் சமம் போன்ற பல விஷயங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார். ஹிந்தியில் வெளிவந்த படத்தை, நம் சூழ்நிலைக்கு ஏற்ப திரைக்கதையை அழகாக மாற்றி அரசியல், சாதி போன்ற பிரிவினையை காட்டி உயர்வு தாழ்வு பேசுபவர்களுக்கு பாடம் கற்பிற்கும் வகையில் படத்தை கொடுத்துள்ளார் அருண்ராஜா.