தந்தையின் உடலை அணைத்தபடி 'அப்பா எழுந்துருங்க' என கதறிய நைனிகா.. கலங்க வைத்த இறுதி நிமிடங்கள் !
1982ம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90ஸ்களில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்து ரஜினி, கமல், கார்த்தி என டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் 90ஸ்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை மீனா. அதன் பின்னர், பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் நடிகை மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர், குடும்பம் குழந்தை என ஆன பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது, இவரது மகள் நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார். வித்யாசாகர், பின்னர் எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று 28.06.2022 இரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்றும், நுரையீரல் பிரச்சனையுடன் கோவிட் பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கூறப்படுகிறது. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறி அவர் கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கலா மாஸ்டர், நடிகை லட்சுமி, இயக்குனர் சேரன், நடிகை ரம்பா என பலரும் மீனா வீட்டுக்கு சென்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. அப்போது நடிகை மீனா அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்தார். அப்போது அவரின் மகள் நைனிகா தந்தையின் உடலை கட்டிப்பிடித்து அப்பா எழுந்திருங்க அப்பா என்று கதறிய காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
பலர் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் இவர்கள் அழுவதைப் பார்க்க முடியவில்லை, 10 வயது குழந்தை நைனிகா தந்தை இல்லாததை எப்படி தாங்கிக் கொள்வார் என்பதை எண்ணிப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.