'சேரி'ன்னா இப்படிதான்..' நடிகை பிரிகிடா பேச்சால் கிளம்பிய சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வந்தனர். படத்தின் முதல் 30 நிமிடங்கள் படத்தின் மேக்கிங் வீடியோ, அதற்கு பிறகு இன்டர்வெல் தொடர்ந்து, 96 நிமிடங்கள் Non linear Single shot ல் எடுக்கப்பட்ட திரைப்படம்.
50 வயதாகும் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அதன் இருண்ட பக்கங்களை திரும்பிப் பார்ப்பது தான் படத்தின் கதை. இதை த்ரில்லிங், சுவாரஸ்யம் கலந்து ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக சொல்லி இருக்கின்றார்களாம்.
இப்படம் உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. பார்த்திபன் இயக்கிய படங்களில் அதிகாலை காட்சி போடப்பட்ட முதல் படம் இரவின் நிழல் தான். ரசிகர்களிடம் இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டர் வாயிலாக தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர்.
இப்படத்திற்காக பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். முதல் நாளில் பெரும்பாலான இடங்களில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதால் பாக்ஸ் ஆபிஸிலும் நன்கு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, பார்த்திபன் மற்றும் நடிகை பிரிகிடா தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரிகிடா தியேட்டரில் நிரூபர் ஒருவரிடம் பேசும்போது, ‘சேரிக்கு போனால் அந்த மாதிரி (கெட்ட) வார்த்தைகளை தான் கேட்க முடியும், அதை மாற்றி நாம் சினிமாவுக்காக ஏமாற்ற எல்லாம் முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கே எப்படி பேசுவார்கள் என்று” என பிரிகிடா கூறினார்.
சேரி மக்கள் பற்றி நடிகை பிரிகிடா இப்படி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்தது. இதற்கு தற்போது பிரிகிடா மன்னிப்பு கேட்டிருக்கிறார். “இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன்..” என குறிப்பிட்டு பிரிகிடா மன்னிப்பு கேட்டிருக்கிறார். பார்த்திபனும் அந்த நடிகை சார்பாக அவரது ட்விட்டை பகிர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.