முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டி ? அரசியலில் அடியெடுத்து வைக்கிறாரா நடிகர் விஷால் ?
பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.
நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால், வருகிற 2024ம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அவர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதையை எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி சார்பில் குப்பம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து, தற்போது நடிகர் விஷால் விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “ஆந்திர அரசியலில் நான் களமிறங்க உள்ளதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். இதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
யாரும் இது தொடர்பாக என்னை அணுகவில்லை. இந்த செய்தி எங்கிருந்து பரவியது என்பது தெரியவில்லை. ஆந்திர அரசியலில் நுழையும் எண்ணமோ சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடும் எண்ணமோ எனக்கு துளியும் இல்லை. படங்களில் தான் முழுக்க முழுக்க கவனம் செலுத்த உள்ளேன்” என்று கூறி அரசியல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.