அண்ணன், அம்மாவை தொடர்ந்து அப்பாவையும் இழந்த நடிகர் மகேஷ் பாபு.. தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்..
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் அண்மையில் சர்காரு வாரிபாட்டா என்ற திரைப்படம் வெளியானது. பரசுராம் இயக்கிய இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் மகேஷ் பாபு.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி, அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் மகேஷ் பாபு, வீட்டில் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. மகேஷ் பாபுவின் தந்தையும், நடிகருமான கிருஷ்ணா காலமானார். மகேஷ் பாபுவின் அண்ணன் இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலக் குறைவு காரணமாக மகேஷ் பாபுவின் அம்மா இந்திரா தேவி காலமானார். இந்நிலையில், ஒரே ஆண்டில் 3வது மரணமாக மகேஷ் பாபு வீட்டில் அவரது அப்பாவும் காலமானது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் மகேஷ் பாபுவுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் சொல்ல தெலுங்கு திரையுலகமே மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவு செய்தி அறிந்ததுமே அவரது வீட்டுக்கு படையெடுத்து இறுதி அஞ்சலி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவு தெலுங்கு திரையுலகில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.